லேபிள்கள்

புதன், 1 அக்டோபர், 2025

கூட்ட மேலாண்மை [ crowd management ] தனிக்கலை - படித்ததை பகிர்கிறேன் .

 


கூட்ட மேலாண்மை [ crowd management ] தனிக்கலை .

அதில் கடைசி இடம் : இது சரியா ?

பித்துக்குளித்தனத்துக்கு முடிவில்லையா ?

நேற்று நடை பயிற்சி சென்றேன் .மழை வந்துவிட்டது . வேறு வழியில்லை ஒரிடத்தில் ஒதுங்கினேன் .எனக்கு முன்பே அங்கு வழக்கமாக வழியில் சந்திக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் ஒதுங்கி இருந்தனர் . உரையாடலில் கேலியாக , “ என்ன தமிழர்கள் ! ஒரு சினிமா நடிகனைப் பார்க்கப்போய் 40 பேரு செத்துருக்காங்க …” என்றார் . 

அவரின் ஏளனம் உறுதினாலும் . கொஞ்சம் அமைதி காத்தேன் . மேலும் கொஞ்சம் பேசலானார்கள் . ஜூன் மாதம் இங்கு [பெங்களூரில் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் கிரிகெட் பார்க்கப் போன ரசிகர்கள் நெரிசலில் 11 பேர் செத்தனர் என்பதை அவர்களுக்கு நினைவூட்டி வரிசையாக சிலவற்றை சொல்ல ஆரம்பித்ததும், “ ஐயையோ பத்திரிகைக்காரன்கிட்ட வாய் கொடுதிருக்கக்கூடாது “ன்னு சொல்லிகிட்டே நடக்கலானார்கள் . மழையும் சற்று ஓய்ந்திருந்ததால் நானும் நடக்கலானேன்.

நடக்கும் போது என் நினைவுத் திரையில் பலகாட்சிகள் ஓடலாயின .

41 மனித உயிர்கள் பலியாகி உள்ளன . வெறும் பிம்ப அரசியலை முன்னிறுத்தி பொறுப்பற்றதனத்தோடு நடந்து கொண்டதால் ஏற்பட்ட விபத்து . எம் ஜி ஆருக்கு இதைவிட பெருங்க்கூட்டம் இதைவிட அதிக நேரம் காத்திருந்தது உண்டு தமிழ்நாட்டு வரலாற்றில் .ஆனால் கட்டுப்படுத்த உள்ளூர் கள தலைவர்கள் இருந்தனர் .ஓர் அரசியல் இருந்தது .இப்போது  விஜயிடம் எதுவும் இல்லை  ; முதலமைச்சர் எனும் பெருங்கனவைத் தவிர  . யாரோ ஆட்டுவிக்க ஆடும் பொம்மைகளால் விளைந்த விபரீதம் இது .

2016 ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறந்து பறந்து தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது  பல மணி நேரம் தாமதமானதால் சேலத்தில் மூன்று பேர் விழுப்புரத்தில் இரண்டு பேர் வெயிலில் மயக்கமடைந்து சாவு . ஆனால் உள்ளூர் தலைமை பொறுப்பாய் செயல்பட்டதால் பதட்டம் கவ்வவில்லை .சாவு அதிகரிக்கவில்லை . ஒப்பிட்டால் எங்கு பலவீனம் என்பது புரியும் .

ஸ்டாலின்  ஆட்சியில் 2024 மெரினா கடற்கரை விமான சாகசத்தின் போது வெயிலில்  மயக்கமடைந்து நான்கு பேர் சாவு. அது அரசின் பொறுப்பற்றதனமே என்பதில் ஐயமில்லை .

1992 பிப்ரவரி ஜெயலலிதா சசிகலா மகாமகத்தில் குளிக்க கும்பகோணம் சென்றனர் .அங்கு ஏற்பட்ட நெரிசல் மற்றும் இடிபாட்டில் 48 பேர் உயிர் இழ்ந்தனர் . 

2015 ல் ஜெயலலிதா ஆட்சியில் வெள்ள நிவாரணம் வழங்கும்போது வியாசர் பாடியில் நெரிசலில் பலர் சாவு .

இந்தியாவில் 2001 க்கும் 2022 க்கும் இடையே மட்டும் 3074 பேர் நெரிசலில் மிதிபட்டு செத்துள்ளனர் .2024 ஜூலையில்  உத்திரபிரதேசத்தில் போலோ பாபா சாமியாரைத் தரிசிக்கப் போய் செத்தவர்கள் 128 பேர்  நெரிசலில் மிதிபட்டு சாவு .

உத்திர பிரதேஷ் பாரபங்கி அஷுனேஸ்வர் ஆலயம் , ஹரித்துவார் மனஸா தேவி கோயில் ,பூரி ஸ்ரீ குண்டிச்சா கோயில் , கோவா லையரி தேவி கோயில் .திருபதி வெங்கடாஜலபதி கோயில் , சபரிமலை   இப்படி வரிசையாக பலகோயில்களில் நெரிசலில் மிதிபட்டு சாவு . டெல்லி ரயில் நிலையத்தில் பண்டிகை கால நெருக்கடியில் மிதிபட்டு சாவு .செத்தவர்கள் எண்ணிக்கை தொடந்து செய்தியாக வருகிறது .பதட்டப்படுகிறோம் .கண்ணீர் விடுகிறோம் . மறந்து போகிறோம் . 

உலகெங்கிலும் கூட இதுபோல் நடந்துள்ளன. 2015 ல் மெக்காவில் நெரிசலில் 2300 பேர் மரணமடைந்த விபரம் அறிவோம் . 1922 அக்டோபரின் தென்கொரியா சியோலில் ஒரு விழாவில் மிதிபட்டுச் செத்தது 159 பேர். இந்தோநேஷியாவில் 135 பேர் இப்படி பல செய்திகளாய் கடந்து போகிறோம்.

ரசிகன் , விளையாட்டு ஆர்வலன் ,பக்தன் , படித்தவன் ,படிக்காதவன் , அந்த மத நம்பிக்கையாளன் ,இந்த மத நம்பிக்கையாளன் , அந்த நாட்டுக்காரன் ,இந்த நாட்டுக்காரன் என எங்கும் நெரிசல் சாவு நடக்கிறது . கும்பல் மனோநிலையும் வதந்தியும் பதட்டமும் இந்த நெரிசல் சாவின் அடிப்படை ஆகும் . எல்லா சாவுக்கு பின்னாலும் ஒருவித பித்துபிடித்த மனோநிலையில் கூடும் கூட்டமே இந்த சாவுகளின் காரணி ஆகிறது . 

இந்த நாளில் கோயிலுக்குப் போனால்தான் சாமி அருள் புரிவாரா ? இந்த சாமியாரை தரிசித்தால் தரித்திரம் போகுமா ? இந்த சினிமாவை இன்னொருநாள் பார்த்தால் என்ன ?அவர் பேச்சை தூர இருந்து கேட்டால் போதாதா ? அலைபேசியும் தொலைகாட்சியும் கணினியும் எல்லாவற்றையும் உங்கள் கண்ணுக்குள் கொண்டு வந்து காட்டுதே . நெடுநேரம் பார்க்கலாமே .கேட்கலாமே . நொடி தரிசனத்துக்காக முண்டி அடித்து சாவது விவேகமா ? 

கும்பல் மனோநிலை இதை எல்லாம் யோசிக்காது .இந்த பித்துக்குளித்தனம் இருக்கும் வரை இத்தகைய சாவுகள் தொடரத்தான் செய்யும் . ஆம் .எவ்வளவு கெடுபிடிகள் , ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் மீறி நடப்பதும் உண்டு .இவற்றில் அக்கறை காட்டாமல் அலட்சியம் காட்டிய அரசின் பொறுப்பற்ற தனங்களும் உண்டு .

கீழ்மட்ட அளவில் தலைமைப் பண்புமிக்கவர்கள் இருந்தால் ,வழிகாட்டினால் ,அதைப் பின்பற்றி நடந்தால் நெரிசல் சாவுகள் நேராது . கூட்ட மேலாண்மை [ crowd management ] தனிக்கலை .நாம் அதில் கடைசி இடம் என்பதுதான் வேதனை .

தினசரி போக்குவரத்து நெரிசலைப் பாருங்கள்  போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு  வரிசையாக இடம் விட்டு போய்க்கொண்டே இருந்தால் பிரச்சனை மிகக்குறைவு .முந்திச் செல்ல முயலுவோரால் மொத்த ஒழுங்கும் சீர்குலைந்து தேவையற்ற தாமதமும் வந்து சேரும் . நாம் எப்போது பொது ஒழுங்கை மதித்து நடக்கப் போகிறோம் ?

கரூர் கோரநிகழ்வின் முதன்மை குற்றவாளி விஜயின் அணுகுமுறையும் ரசிக பித்துகுளித்தனமுமே ! அரசு தரப்பின் சில சறுக்கல்களும் இருக்கும் ! ஆய்க ! திருத்துக !

சுபொஅ.

29/09/25.

கூட்ட மேலாண்மை [ crowd management ] தனிக்கலை - படித்ததை பகிர்கிறேன் .

  கூட்ட மேலாண்மை [ crowd management ] தனிக்கலை . அதில் கடைசி இடம் : இது சரியா ? பித்துக்குளித்தனத்துக்கு முடிவில்லையா ? நேற்று நடை பயிற்சி ச...