லேபிள்கள்

ஞாயிறு, 22 மார்ச், 2026

இயற்கையோடு நாம் பேசலாம்... மனிதர்களை விட மரங்கள் நம்மை புரிந்து கொள்ளும்..!

 உண்மைக் கதை இது..!


முதலில்  இதை நம்பவில்லை..!

என் முக நூல் தோழி ஒருவரின் வாழ்வில்   நடந்த ,  உண்மைக் கதை இது..!

இந்தப் பெண்... கணவனோடு சென்னையில் வசிப்பவள்.

கல்யாணமாகி பத்து வருடங்களுக்கு மேல் குழந்தை இல்லாதவள்.

வழக்கம் போல கணவன்  வீட்டின் ஏச்சும் பேச்சும் குறிப்பாக மாமியாரின் குத்தலும்...

ஒருமுறை கணவனின் சொந்த ஊருக்கு, கணவனோடு போய் இருக்கிறாள்.மதுரை அருகே ஒரு கிராமம். வீட்டுக்குப் பின்னால் ஒரு சில மாமரங்கள். அதில் ஒரு மரம் பல வருஷ காலமாக காய்க்கவில்லை...

ஒரு நாள் மாலை ... மாமியார் தன் மகனிடம் இவள் கணவனிடம்  சொல்லி இருக்கிறாள்:“எப்பா..அடுத்த மாசம் இந்த மரத்தை வெட்டச் சொல்லி இருக்கேம்பா..”

“ஏம்மா...”

“இது கூட சேர்ந்த மரங்கள் எல்லாம் காய்ச்சுத் தள்ளுது... இது மட்டும் காய்க்கலை ... அதனாலே ஆளை வரச் சொல்லி வெட்டிடலாம்னு இருக்கேன்..”

கணவன் இதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாலும் , இந்தப் பெண்ணுக்கு பொறுக்கவில்லை...

உடனேயே அந்த மாமரத்தை தேடிப்  போய் இருக்கிறாள்.

கண்ணீரோடு அந்த மாமரத்தை கட்டிப் பிடித்திருக்கிறாள்.

கண்களில் நீர் வழிய , அந்தப் பெண் இப்படிச் சொல்லி இருக்கிறாள் : “அட மாமரமே... நான் தான் காய்க்காத மரம்... பிள்ளை பெறாத மலடி... என்னைத் தான் எல்லோரும் திட்டுகிறார்கள்.நீயும் ஏன் என்னைப் போல்  காய்க்காமல் இப்படி நிற்கிறாய்..? என்னையாவது திட்டுகிறார்கள் ... உன்னை வெட்டப் போகிறார்கள்.தயவு செய்து நீயாவது காய்த்து விடு... நீயும் என்னைப் போல் மலட்டுப் பட்டம் வாங்காதே..” என்று கேவிக் கேவி அழுதிருக்கிறாள்...!

அப்புறம் இவள் கணவனோடு சென்னை புறப்பட்டு வந்து விட்டாள்.ஆனால் ஒவ்வொரு நாளும்  மனசுக்குள் அந்த மரத்தை வெட்டும் காட்சித் தெரிய ... தனியாகப் போய் உட்கார்ந்து அழுது தீர்த்திருக்கிறாள் ..!

ஆனால் இதற்குப் பிறகு நடந்தது தான் ஆச்சரியம்..!

அத்தனை வருட காலம் காய்க்காத அந்த மாமரம் , அதற்குப் பின் பூத்துக் , காய்த்து , இப்போது மற்ற மாமரங்களைப் போல செழிப்பாக நிற்கிறதாம்..!

முதலில் நான் இதை நம்பாவிட்டாலும் , விஞ்ஞானபூர்வமாக சில விஷயங்கள் விளங்கிய பிறகு  இப்போது அதை முழுமையாக நம்புகிறேன்..!

ஆம்.இயற்கையோடு நாம் பேசலாம்... மனிதர்களை விட மரங்கள் நம்மை புரிந்து கொள்ளும்..!

நம்மாழ்வார் வாழ்விலும் இதைப் போல ஒரு விஷயம் நடந்திருக்கிறது..! 

நம்மாழ்வார் விழுப்புரத்தில் உள்ள சிறு கிராமத்தில், ஒரு விவசாயிடம் பேசிக் கொண்டிருக்கிறார். 

அந்த விவசாயி, “ ஐயா.. இந்த பலா மரம் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக இருக்கு... ஆனால், இது நாள் வரை ஒரு பழம் கூட தரல.. இந்த மரத்தின் நிழலால், பயிர்களும் வளர்வதில்லை... அதான், வெட்டிடலாம்னு  இருக்கேன்” என்கிறார் ..

“பறவையெல்லாம் கூடு கட்டி இருக்கே...?” என்று உடைந்த குரலில் கேட்கிறார் நம்மாழ்வார்.

“இல்லைங்கய்யா...  நமக்கு எந்த பயனும் இந்த மரத்தால இல்லை...” 

இதைக் கேட்டவுடன் ஓடிச் சென்று, நம்மாழ்வார் மரத்தைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறார்... ஓவென்று அழுகிறார்... பின்பு மரத்திடம், “உன்னை பிரயோஜனம் இல்லாதவன்னு சொல்றானே.. அவனுக்கு நீ ஏன் பழம் தர மாட்டேங்கிற...?” என்று மரத்துடன் உணர்வுப்பூர்வமான, ஒரு நீண்ட உரையாடல் நடத்துகிறார்.  இதைப் பார்த்த விவசாயியின் மனம் மாறுகிறது. மரத்தை  வெட்ட வேண்டாம் என்று முடிவு செய்கிறார். 

ஆனால், இத்துடன் இது முடியவில்லை... ஓராண்டுக்குப் பிறகு, அந்த விவசாயி ஒரு பெரிய பலாப்பழத்துடன் திருச்சி மாவட்ட திருவானைக்காவலில் இருந்த நம்மாழ்வாரை சந்திக்க வருகிறார். “அய்யா... அந்த மரத்துல காய்ச்ச பழம்யா...” என்று உச்சகட்ட சந்தோஷத்தில் அழுது கொண்டே பழத்தை கொடுக்கிறார்.

[ இது விகடனில் வெளி வந்தது ]

ஆம்.இயற்கையோடு நாம் பேசலாம்...

மனிதர்களை விட மரங்கள் நம்மை புரிந்து கொள்ளும்..!

படித்ததில் பிடித்தது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths