இந்தியாவில் சில முதன்மைகளுக்கு சொந்தக்காரர் விஜயலட்சுமி பண்டிட்!
ஆகஸ்ட் 18ம் தேதி 1900ல் பிறந்தார் விஜயலட்சுமி பண்டிட்.
இவரது இயற்பெயர் ஸ்வரூப் குமாரி.
மோதிலால் நேரு-ஸ்வரூப ராணி தம்பதியினரின் மகளாவார். ஜவஹர்லால் நேருவின் தங்கை. நேருவை விட 11 வயது இளையவர்.
இந்தியாவில் மந்திரி பொறுப்பு வகித்த முதல் பெண்மணி இவர்தான்.
ஐ.நா.பொதுச்சபையின் முதல் பெண் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டதன் மூலம் அனேக இந்திய பெண்களுக்கு ரோல் மாடலாகவும் திகழ்ந்தவர்.
நம் நாடு விடுதலைப் பெற வேண்டும் என்று போராடிய பெண்களில் மிக முக்கியமானவர் விஜயலட்சுமி பண்டிட். ஒத்துழையாமை இயக்கத்தில் போராடியவர் என்ற பெருமைக்குரியவர்.
1921ம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்ற ரஞ்சித் சீத்தாராம் பண்டிட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு தனது பெயரை வியலட்சுமி பண்டிட் என்று மாற்றிக் கொண்டார்.
1932-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, ஒரு வருட காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பிறகு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதால், 1942-ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேசத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, முதல் பெண் மந்திரியாக பொறுப்பு ஏற்றார்.
1953-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தலைவராக பணியாற்றினார். சுதந்திரம் பெற்ற பிறகு, அவர் பல நாடுகளுக்கு இந்தியாவின் தூதுவராக இருந்தார். இந்தியாவின் சார்பாக ஐக்கிய நாடுகளின் சபையைச் சார்ந்த மனித உரிமை ஆணையத்திலும் பணியாற்றியுள்ளார்.
1962ல் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பெறுப்பேற்றார்.
1964ல் ஜவஹர்லால் நேரு மறைந்தார். அவருக்கு பதிலாக மக்களவைக்கு உத்தரபிரதேசத்தின் பெல்பூர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். ஆனால் சிறிது காலத்திலேயே காரணம் கூறாமல் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
1977ல் இவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அது இந்திரா காந்தியின் அவசர நிலை பிரகடன காலம். விஜயலட்சுமி பண்டிட் அப்போது இந்திரா காந்திக்கு எதிராக குரல் கொடுத்தார். எனவே அவர் ஜனாதிபதியாக வெற்றி பெற முடியவில்லை.
அதன்பிறகு அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
டேராடூனில் உள்ள இல்லத்தில் அவர் ஓய்வுக் காலத்தை கழித்தார். அப்போது தனது வாழ்க்கை வரலாற்றை எழுதத் தொடங்கினார். "த ஸ்கோப் ஆப் ஹேப்பினஸ் : ஏ பெர்சனல் மிமோயர்" என்ற பெயரில் அவரது வாழ்க்கை வரலாறு நூல் வெளியானது.
இந்த நூலை எழுத 12 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். 1990ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி இயற்கை எய்தினார்.



Good work done by her should be remembered always.
பதிலளிநீக்கு