லேபிள்கள்

ஞாயிறு, 12 அக்டோபர், 2025

இத்தாலி பைசா கோபுரத்தின் சுவாரஸ்யங்கள்! சாய்ந்தது ஏன்... நிமிர்ந்தது எப்படி...

 

சாய்ந்தது ஏன்... நிமிர்ந்தது எப்படி... பைசா கோபுரத்தின் சுவாரஸ்யங்கள்!

 


இத்தாலியின் பைசா கோபுரத்தைப் பற்றி கேள்விப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒரு கட்டடம் சாய்ந்தாலும் பல நூறு ஆண்டுகளாக கீழே விழவில்லை என்றால் அது ஆச்சர்யம்தானே. ஆனால், நாம் இதுவரை அது ஏன் சாய்ந்தது, சாய்ந்தும்கூட இன்னும் ஏன் கீழே விழவில்லை என்று யோசித்ததுண்டா?

அந்தக் கதையை நீங்கள் கேட்டால் பைசா கோபுரத்தின் சோகத்தைத் தாண்டிய சரித்திரம் புரியும் .

முதலில் பைசா கோபுரம் என்று ஒன்று அமைக்கப்பட்டது பைசா நகரில் உள்ள ஓர் ஆலயத்துக்கு மணிகூண்டு கட்ட வேண்டும் என்ற நோக்கத்துக்காகதான். 

1173-ம் ஆண்டு இந்தக் கோபுரம் கட்டுவதற்கான அடித்தளம் போடப்பட்டது. இதற்கான வடிவமைப்பைத் தந்தவர்கள் Guglielmo மற்றும் Bonanno Pisano என்பவர்கள். முதல் இரண்டு தளங்களை அமைக்கும் வரை எந்த விபரீதமும் பெரிதாக இல்லை.

1178-ம் ஆண்டு மூன்றாம் தளம் கட்டி முடிவடையும் நிலையில்தான் கட்டடம் ஒருபுறமாக சாய்வதை முதன் முதலாகக் கண்டறிந்து இருக்கிறார்கள்.

இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தபோதுதான் செய்த தவறு புரிந்தது. இந்த பைசா கோபுரம் கட்டப்பட்ட இடம் களிமண் கலவை நிறைந்த இடம்.

சாதாரணமாக களிமண்ணில் கடினப்படும் தன்மை குறைவு என்பதால் அதன் உறுதித்தன்மையும் குறைவு. இது தெரியாமல் களிமண் இருக்கும் இடத்தில் கட்டடம் கட்டியது மட்டுமல்லாமல் அடித்தளமும் வெறும் 3 மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே அமைக்க, கட்டடத்தின் எடையைத் தாங்காமல் மண் சரிய கட்டடமும் ஒரு புறமாய் சாய்வது தெரியவந்தது.

இதனை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் விழித்த பொறியாளர்கள் களிமண் இறுகும் வரை காத்திருப்போம் என்று காத்திருந்திருக்கிறார்கள். அந்த வெயிட்டிங் டைம் கிட்டத்தட்ட 100 வருடங்கள். மீண்டும் ஏதோ ஒரு நம்பிக்கையில் 1272-ம் ஆண்டு மேலும் 4 தளங்களை அமைக்கும் முயற்சியில் இறங்க இந்த முறை சோதனை போர் வடிவில் வந்தது.

1284-ம் ஆண்டு நடந்த மேலோரியா போர் கோபுர கட்டுமானத்தைப் பாதித்தது. எல்லா பிரச்னைகளையும் தாண்டி ஒரு வழியாய் 1372-ம் ஆண்டு மணிக்கூண்டில் மணி நிறுவப்பட்டது.

200 வருட போராட்டம் இதோடு முடிந்தது என்று நினைத்தால் அதுதான் இல்லை. 19-ம் நூற்றாண்டு மத்தியில் மீண்டும் கோபுரம் சரிய ஆரம்பிக்க 800 டன் எடையை சரியும் திசைக்கு எதிர் திசையில் கொடுத்து சமன் செய்தார்கள் கட்டடப் பொறியாளர்கள்.

ஆனால், மீண்டும் உலகப் போர் குறுக்கிட பைசா கோபுரத்தின் நிலைமை கவலைக்குள்ளானது. அமெரிக்கா, இத்தாலியில் இருக்கும் பெரும்பாலான கட்டடங்களைத் தகர்த்துத் தள்ள அதிலும் தப்பிப் பிழைத்து நின்றது இந்த பைசாவின் சாய்ந்த கோபுரம்.

இதற்கு பின்புதான் இத்தாலி பைசா கோபுரத்தின் பெருமையை உணர்ந்து அதனை எப்படி சரிய விடாமல் தடுப்பது என்று மூளையைப் போட்டுக் கசக்க ஆரம்பித்தார்கள்.

எப்படியோ ஒரு வழியாக 1987-ம் ஆண்டு யுனெஸ்கோவின் பெருமையையும் இந்தக் கோபுரம் தேடிக்கொண்டுவிட்டது.

ஆனாலும் பைசா கோபுரத்தின் சோகம் தீர்ந்தப்பாடில்லை. கணினி வடிவமைப்புகள் அதிகபட்சம் 5.44 டிகிரி வரை சாயும் பட்சத்தில் கோபுரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கணக்கிட்டுச் சொல்ல, 1990-ம் ஆண்டு 5.5 டிகிரி சாய்ந்த பைசா கோபுரத்தைக் கண்ட இத்தாலிய அரசு என்ன செய்வது என்று தெரியாமல் கோபுரத்தை மூடிவிட்டது.

 வருடத்துக்கு 1 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிடும் இந்த பைசா கோபுரம் 1990-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை மூடிதான் வைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை கீழே விழுந்துவிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதாலே பைசா கோபுரம் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் மூடப்பட்டே இருந்தது.

60 மீட்டர் கட்டவேண்டும் என்ற நோக்கத்தோடு எழுப்பட்ட இந்த கோபுரம் ஒரு புறம் 55.86 மீட்டரும் மற்றொரு புறம் 56.67 மீட்டரும் இருந்தது.

இதில் 56.67 மீட்டர் இருக்கும் பைசா கோபுரத்தின் பக்கவாட்டில் மண்ணைப் பறித்து எடுத்ததன் மூலம் சாய்ந்து இருந்த கட்டடத்தின் கோணம் சிறிது குறைக்கப்பட்டது. அதாவது 1990 களில் 5.5 டிகிரி என்ற கோணத்தில் சாய்ந்திருந்த கட்டடம் 2001-ம் ஆண்டில், இடைப்பட்ட காலத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின் மூலம், 3.99 டிகிரி எனக் குறைக்கப்பட்டது.

மூடி வைக்கப்பட்டிருந்த பைசா கோபுரம் ஒருவழியாக பார்வையாளர்கள் வசதிக்காக 2001-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி திறக்கப்பட்டது. 

சரித்திரம் படைக்க வலிகள் பல கடக்க வேண்டும் என்பது பைசா கோபுரத்துக்கும் பொருந்தும்.


1 கருத்து:

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths