எப்படிபட்ட நோயையும் குணப்படுத்தும் வல்லமை கொண்ட சித்தர் #சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் ஆலயத்தின் அருகில் சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்த சித்தரான குருலிங்க ஸ்வாமிகளுடைய சமாதி ஆலயத்துக்கு சென்று இருந்தபோது அந்த உணர்வலைகளை உணர முடிந்தது.
சித்தர் குருலிங்க ஸ்வாமிகளுடைய இளமைக் கால வரலாறு எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் விருத்தாசலத்தில் இருந்து சென்னைக்கு நடைப்பயணத்தை மேற்கொண்டு வந்திருந்தார் என்ற உண்மையை மட்டும் பக்தர்கள் சிலர் மூலம் அறிய முடிந்ததாம். அவர் வரும் வழியில் பல மகிமைகளை நிகழ்த்தி உள்ளதாகவும், தீராத, மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல மக்களுடைய வியாதிகளை மாய நிவாரணத்தினால் குணப்படுத்தி வந்ததாகவும், அதனால் அவருக்கு பல பக்தர்கள் ஏற்பட்டார்கள் எனவும் கூறப்படுகின்றது.
#சித்தர் குருலிங்க ஸ்வாமிகளை பொறுத்தவரை அவர் தபஸ்ஸில் அமர்ந்து இருந்தபோது அவர் கையில் சிவலிங்கம் ஒன்று உருவாகி வெளி வந்ததாகவும், அந்த சிவலிங்கத்தை பல காலம் அவர் பூஜை செய்து வழிபட்டு வந்துள்ளார் என்பதை நேரிலே பார்த்துள்ள பக்தர்களுடைய சந்ததியினர் மூலம் தெரிய வந்ததாம். அவர் என்ன உணவு அருந்தினார், உடமைகள் எங்கு வைத்திருந்தார் என்பதையும் ஒருவரும் அறிந்திருக்கவில்லை என்பதின் காரணம் அவர் எந்த உடைமையையும் தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை என்பதே.
காரணீஸ்வரர் ஆலயத்துக்கு வந்தவர் அங்கு ஏதாவது ஒரு மூலையில் சென்று அமர்ந்து கொண்டு தியானத்தில் இருந்தார். அவர் கண் விழித்திருக்கும் நேரங்களில் அங்கு வந்து அவரை வணங்கிய மக்களின் குறைகளை தீர்த்தார். வீபூதி தந்து வியாதிகளை குணமாக்கினாராம். காரணீஸ்வரர் ஆலயத்துக்கு தவறாது சென்று வந்த பக்தர்கள் பலரும் அந்த சித்த புருஷரை சந்தித்து ஆசி பெறாமல் வந்ததில்லை என்ற நிலை உருவாயிற்று. முடிவாக ஒருநாள் அவர் தாம் சமாதி அடைய வேண்டிய நாள் வந்து விட்டதை உணர்ந்தார். அங்கிருந்த பண்டிதரிடம் அதற்கு அனுமதியையும் கேட்டார். ஆனால் அந்த பண்டிதரோ ஆலயத்துக்குள் சமாதி அடைய அனுமதிக்க முடியாது எனக் கூறி விட்டார். அந்த காலங்களில் அனைத்து ஆலயங்களும் தனி நபர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதினால் பண்டிதரை அணுக வேண்டி இருந்தது. ஆகவே ஆலயத்துக்குள் சமாதி அடைய தனக்கு (சித்தர் குருலிங்க ஸ்வாமிகள்) அனுமதி மறுக்கப்பட்டதை கண்டவர் மனம் வருந்தி அங்கிருந்து கிளம்பிச் சென்று ஒரு ஆற்று ஓரத்தின் பக்கத்தில் தியானத்தில் அமர்ந்து கொண்டார்.
அன்று இரவு அவரை ஆலயத்துக்குள் அனுமதிக்க மறுத்த பண்டிதருக்கு திடீர் என வயிற்றுக் கோளாறும் பேதியும் ஏற்பட தாங்க முடியாத அவதிப்பட்டார். எந்த மருத்துவமும் அவருக்கு குணத்தை தரவில்லை. என்ன செய்வது என அவதிப்பட்ட அவருக்கு பலருக்கும் நோய்நொடிகளை குணப்படுத்திய சித்தர் குருலிங்க ஸ்வாமிகளின் நினைவு வந்தது. அவரை தேடித் சென்று அவர் கால்களில் விழுந்து தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டார். தனக்கு வந்துள்ள பொறுக்க முடியாத வயிற்று உபாதையைக் கூறி அதற்கு நிவாரணம் கேட்க கண்களைத் திறந்து பார்த்த ஸ்வாமிகள் தனது கமண்டலத்தில் சிறிது வீபுதியை போட்டுக் கலக்கி அந்த நீரை அவருக்கு குடிக்கக் கொடுத்தார். அந்த தண்ணீரைக் குடித்த பண்டிதரின் உபாதை, அங்கிருந்த அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் உடனடியாக நின்றது. வியாதிகள் ஒன்றுமே இல்லாதது போல பண்டிதரும் சாதாரண நிலையை அடைந்தார்.
அதன் பின் பண்டிதர் சித்தர் குருலிங்க ஸ்வாமிகளை ஆலயத்துக்கு வந்து சமாதி அடைய அழைப்பு விடுத்தார். ஆனால் ஸ்வாமிகளோ ஆலயத்துக்குள் சமாதி அடைய விரும்பாமல் ஆலயத்தின் அருகில் இருந்த வேறு ஒரு இடத்தைக் காட்டி அங்குதான் 1886 or 1887* அன்று மதியம் 12 மணிக்கு தான் ஜீவ சமாதி அடைய விரும்புவதாகக் கூறினார். ஸ்வாமிகள் கூறியதை போலவே சமாதி அடைவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பண்டிதர் செய்தார். அன்று காலை சித்தர் குருலிங்க ஸ்வாமிகள் தனது பக்தர்களுடன் நகரின் பல இடங்களுக்கும் ஊர்வலமாகச் சென்று சமாதி ஆலயம் உள்ள இடத்தை அடைந்து சமாதிக்குள் சென்று அமர்ந்து கொள்ள ஏற்கனவே ஸ்வாமிகள் கூறி இருந்தது போலவே சமாதியின் மேல்பகுதி அடைக்கப்பட்டது. அதன் மீது சமாதியை எழுப்பி ஒரு சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தார்கள்.
இன்றைக்கும் அந்த சமாதி ஆலயத்துக்குள் சென்று கண்களை மூடிக் கொண்டு சில நிமிடங்களே தியானம் செய்தாலும் சித்தர் குருலிங்க ஸ்வாமிகளின் அருளாசி அவர்களுக்கு கிடைப்பதாக நம்புகின்றார்கள். அவர்களுடைய குறைகளும் விலகுகின்றனவாம். அடிக்கடி அங்கு சென்று ஸ்வாமிகளை வணங்கித் துதிக்கையில், மரத்தில் இருந்து விழுந்திடும் காய்ந்து போன இலைகளை போல மெல்ல மெல்ல பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கமும் குறைவதாக பக்தர்கள் கூறுகின்றார்கள். எது எப்படியோ அங்கு சென்று சில நிமிடங்களே கண்களை மூடி பிரார்த்திக்கும்போது நல்ல அதிர்வலைகளை நிச்சயமாக உணர முடிகின்றது. அதன் காரணம் அந்த மகான் சூட்சும வடிவில் சமாதியில் இருக்கின்றார் என்பதே.
ஆலய விலாசம் இது:
குருலிங்க ஸ்வாமிகள் சமாதி #ஆலயம்,
10/92, காரணீஸ்வரர் கோவில் தெரு,
சைதாப்பேட்டை,
சென்னை.
ஓம் நமச்சிவாய
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக