லேபிள்கள்

செவ்வாய், 1 ஜூலை, 2025

திருமணமான 78 நாட்களில்.. கணவர் வீட்டார் கொடுமை தாங்காமல்.. திருப்பூர் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

 


     திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டி புதூரில் திருமணமான 78 நாட்களில் கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியதாகக் கூறி இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

   திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகளான 27 வயது ரிதன்யாவுக்கும், திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணன் என்பவரது மூத்த மகன்வழிப் பேரன் கவின் குமார் என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

            "என் மேல எந்த தப்பும் இல்லப்பா! எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கலை! அவிநாசி இளம்பெண் ஆடியோவில் கண்ணீர்".

            திருமணமாகிய நாளில் இருந்தே கணவர் கவின்குமாரும், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி, தாய் சித்ராதேவி ஆகியோர் தொடர்ந்து ரிதன்யாவை சித்திரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

           இது தொடர்பாக யாரிடமும் கூறாமல் இருந்து வந்த ரிதன்யா தொடர்ந்து மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார்.

            இந்நிலையில் இன்று கோவிலுக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு ரிதன்யா தனது காரில் மொண்டிபாளையம் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது, வழியில் சாலையோரம் காரை நிறுத்திய அவர் தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பியுள்ளார்.

            அதில், தொடர்ந்து கவின்குமாரும் அவரது பெற்றோரும் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தி வருகின்றனர். கொடுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே தன்னை திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து கவின்குமாருடன் வாழ விரும்பவில்லை. அந்த அளவுக்கு தைரியமான பெண் இல்லை நான். வேறு ஒருவருடன் வாழ்க்கையைத் துவக்கவும் தனக்கு விருப்பமில்லை. எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

            கணவர் வீட்டில் தனது நகைகள் உள்ள பெட்டியின் சாவி வைக்கப்பட்டுள்ள இடத்தையும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, தான் கொண்டு வந்திருந்த தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி மருந்தை உட்கொண்டு உள்ளார்.

       இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்டு வாயில் நுரையுடன் காருக்குள் மயக்கமாகிக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதியினர் உடனடியாக திருப்பூர் மாவட்டம், சேயூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

            சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரை திறந்து பார்த்தபோது ரிதன்யா உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடல் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீஸார், ரிதன்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

               திருமணமாகி 78 நாட்களே ஆன நிலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ரிதன்யாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

             மாப்பிள்ளை வீட்டார் செய்யும் இதுபோன்ற கொடுமையால் அந்த குடும்பமே விளங்காது. அவர் சந்ததியே தழைக்காது.

        எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று நாம் அனைவரும் உறுதிஎடுப்போம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

  வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு...